மதுரை: கொரோனாவின் கடைசி வைரஸை அழிக்கும் வரை கொரோனா தடுப்புப்பணி தொடரும் என தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு, தற்போது நாடு முழுவதும் வருகிற ஜூன் 30ம் தேதி வரை முடக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனாவின் கடைசி வைரஸை அழிக்கும் வரை கொரோனா தடுப்புப்பணி தொடரும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மேற்கு ரோட்டரை சங்கத்தினர் சார்பில் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு ஆர்.பி. உதயகுமார்க்கு முன்னிலையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் ப்ரியா ராஜ், டீன் சங்குமணி, ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜவின் பாட்ஷா, தியாகராசர் கல்லூரி முன்னாள் முதல்வர் ராஜாகோவிந்தசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், உலகப்போர் வந்தபோது கூட உலகம் கண்டிடாத பேரிடர், கொரோனாவால் ஏற்பட்டுள்ளது என்றும், இது வீட்டிலேயே உட்கார்ந்துகொண்டு வீடியோவில் பேசுபவர்களுக்கு தெரியாது, புரியாது எனவும் கூறினார். மேலும், இன்று ஏற்பட்டுள்ள சூழ்நிலை என்பது, இதுவொரு சாதாரண பேரிடர் அல்ல, இதுவரை இந்த உலகம் கண்டிடாத மாபெரும் பேரிடர். ஒட்டுமொத்த உலகத்தையும் தாக்கக்கூடிய வைரஸாக இந்த கொரோனா வைரஸ் பேரிடர் என்பதை இன்று மக்கள் எதிர்கொண்டுள்ளார்கள். கடைசி வைரஸை ஒழிக்க வைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். தற்போது அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான தொற்று பரிசோதனை உபகரணங்களை அரசு நிறைவாக வழங்கி வருகிறது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் சேவை உள்ளத்தோடு பணிபுரியும் மருத்துவக்குழுவினர் இருக்கும் வரை தமிழகத்தில் எத்தனை கொரோனா வைரஸ்கள் வந்தாலும் அவை தகர்த்து எரியப்படும் என தெரிவித்தார்.